இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பு ஆழமான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. குடியுரிமைச் (திருத்த) சட்டம் 2019 மூன்று முக்கிய காரணங்களுக்காக நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். முதலாவதாக, அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளடக்கத்திற்கும் நோக்கத்திற்கும் எதிரானது. இரண்டாவதாக அது மக்களிடையே ஆழமான பேதங்களை உருவாக்கி அவர்களை பிளப்பதோடு மனித உரிமைகளையும் மீறுகிறது. மூன்றாவதாக, அது ‘இந்து ராஷ்டிரம்’ என்ற நோக்கத்தோடு நமது அடிப்படை அரசியல் மீதும் ஒட்டு மொத்த மக்கள் மீதும் ‘இந்துத்துவா’ என்ற அரசியலையும் சித்தாந்தத்தையும் திணிக்கிறது. நமது அரசியலமைப்பின் மாண்பு மிகவும் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. எனவே ஜனநாயகத்தின்பால் நம்பிக்கையுள்ள எவரும் நம்மைச் சுற்றி நடக்கும் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது.
சாதாரண குடிமக்களுக்கு எதிரானது
நாம் முதலில் இந்த மூன்று அம்சங்களையும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. முதலாவதாக, குடியுரிமைச் (திருத்த) சட்டம் 2019 நமது அரசியலமைப்புச் சட்டத்தின் உள்ளடக்கத்திற்கும் நோக்கத்திற்கும் எதிரானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 5 முதல் 11 வரை குடியுரிமை குறித்து பேசுகிறது. குடியுரிமைச் சட்டம் 1955, பிறப்பு, வம்சாவளி, பதிவு செய்தல் மற்றும் இயல்புரிமை ஆகியவற்றின் மூலம் குடியுரிமை குறித்த சட்ட விதிகளை வகுத்துள்ளது. புதிய சட்டத்திருத்தமானது மதம், இனம், பாலினம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை கணக்கில் கொள்ளாமல், பொதுவான குடியுரிமை என்பதற்கு எதிராக உள்ளது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14, “சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை அரசு மறுக்கக்கூடாது அல்லது இந்திய எல்லைக்குள் சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதை உத்தரவாதப்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14 என்பது இந்திய குடிமக்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய அனைவருக்கும் பொருந்தும் என்பதையும் வலியுறுத்துகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? நாம் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவை, அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற செறிவான விவாதங்கள், அதன் உறுப்பினர்களது அறிவுத்திறன், அத்துடன் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் உயரிய பங்கு ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறோம். இந்திய சுதந்திரப்போரில் பங்கு பெற்ற, நாம் கொண்டாட மறந்த பல பத்து லட்சக்கணக்கான போராளிகளின் வீரம் செறிந்த போராட்டமே நமக்கான அரசியலமைப்பை நிஜமாக்கி இருக்கிறது. இவர்கள் அனைவரும் மதமாச்சரியமற்ற தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினர் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களே. இந்தப் போராட்டம் காலனிய ஆட்சியை அகற்றுவது என்பதைத் தாண்டி விரிவான நோக்கம் கொண்டது. மதபேதமையும் பொருளாதார சமச்சீரற்ற தன்மையும் வேரூன்றி இருந்த ஒரு சமூகத்தில் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பற்ற மாண்புகள் கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சமூக நீதிக்கான தேவை ஆகியவற்றை உருவாக்கியதில் இந்த போராளிகளின் பங்கு நவீன இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சிவில் உரிமைப் போராட்டங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத் தவறியிருந்தாலும் கூட, அது இந்திய வரலாற்றின் ஒரு மைல்கல் ஆகும்.
நம்முடைய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்தோடு சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளற்ற, சாதிய மற்றும் மத ரீதியிலான பாகுபாடற்ற சமூகத்தை இந்தியாவில் உருவாக்குவதற்கான போராட்டம் என்பதிலும் மிகுந்த கவனத்துடன் இருந்துள்ளார்கள். இதுதான் 1920ஆம் ஆண்டுகளில் இடதுசாரிகளின் கொள்கை அறிக்கையாக இருந்தது. அந்த கொள்கை நோக்கங்களே பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின் மரண தண்டனைக்குப் பின் 1931ல் கராச்சியில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிலும் பிரதிபலித்தது. அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, பேச்சுரிமை, சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ ஆகிய கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டிய அவசியத்தை காங்கிரசுக்கு உண்டாக்கியது.
முந்தைய சுதேசி மாகாணங்களில் ஏற்பட்ட இயக்கங்களின் எழுச்சியின் வாயிலாக பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய இயக்கம் மேலும் வலுப்பெற்றது. நமது முன்னோர்கள் சாதிமத பேதமற்ற அரசியலுடன் கூடிய சுதந்திர இந்தியா என்ற கனவை கண்டார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத ஒரு கட்சியின் ஆட்சி அதிகாரத்தால் நமது மதச்சார்பின்மை ஜனநாயகம், சமத்துவம், கூட்டாட்சித் தத்துவம் மற்றும் சமூக பன்முகத்தன்மை ஆகியவற்றை காக்கும் நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது ஒன்றும் ஆச்சரியப்படக் கூடிய விசயமல்ல. இன்றைய இந்துத்துவ சக்திகளின் முன்னோர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முன் மண்டியிட்டிருந்தார்கள் என்பது இந்திய வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ள ஒன்று. அவர்கள் இதை மறுப்பதன் மூலம் தங்களின் கோழைத்தனமான கடந்த காலத்தை மாற்றி விடமுடியாது.
உரிமைகள் மீறல்
நம்முடைய இரண்டாவது அம்சம் என்னவென்றால், குடியுரிமைச் (திருத்த) சட்டம் 2019 என்பது பிரிவினை, ஆழமான பாகுபாடுகள் ஆகியவற்றை உருவாக்குவதோடு மனித உரிமைகளுக்கும் எதிரானது. நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் நம்முடைய ஒற்றுமை என்பது பெரும் போராட்டங்களின் மூலமாக கட்டமைக்கப்பட்டது. அதற்கு ஏற்பட்டுள்ள பல்வேறு அச்சுறுத்தல்களின் குடியுரிமைச் (திருத்த) சட்டம் 2019 என்பதும் ஒன்று. நாம் போராடி உருவாக்கிய அரசியலமைப்பு, தனிமனித மற்றும் சமூக வேறுபாடுகளை களையும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய சகோதர மனப்பான்மையை உருவாக்கும் வகையில் ஒற்றுமையை கட்டமைப்பதை அங்கீகரிக்கிறது.
குடியுரிமைச் (திருத்த) சட்டம், ஆழமான வகுப்புவாத பிரிவினைகளையும், வகுப்பு ரீதியான ஒருங்கிணைப்பையும் உருவாக்க முயற்சிக்கிறது. இந்தச் சட்டம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் 31க்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளனர். மத அடிப்படையில் குடியுரிமை வழங்கியிருப்பது என்பது இஸ்லாமியர்களை மதரீதியாக பாகுபடுத்தியிருப்பதோடு, ‘மதச்சார்பின்மை’ என்ற கொள்கையை நிராகரித்துள்ளது.
இந்தச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது, மதபேதத்தை உருவாக்குகிறது என்பதை அறிந்து பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் முன்னிலை வகுத்து எழுச்சியுடன் போராடி வருகிறார்கள் என்பது தான். ஆளும் பி.ஜே.பி.யும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றியுள்ள போதிலும், இந்தியாவை மதரீதியாக பிளவுபடுத்தும் முயற்சியை எதிர்த்து இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் போல் இன்றைய இளம் தலைமுறையினர் ஒன்றுபட்டு போராடி தடுப்பார்கள். இந்த சட்டம் பாரபட்சமானது மற்றும் மனித உரிமைகளை மீறுவது என்று அவர்கள் கண்டனம் முழங்கியிருக்கிறார்கள்.
நம்முடைய இறுதியான அம்சம் என்னவென்றால் இந்த சட்டத்தில் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலும், அதன் இறுதி லட்சியமான ‘இந்து ராஷ்டிரமும்’ மறைந்திருக்கிறது என்பதை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கடந்த கால அனுபவங்களும் தற்போதைய நிகழ்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இந்துத்துவ சக்திகள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெறாமல் விலகி இருந்ததை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இந்த காலகட்டத்தில் தான் எம்.எஸ்.கோல்வால்கர் தம்முடைய ‘இந்து ராஷ்டிரம்’ என்ற கோட்பாட்டை முன்மொழிந்தார். எனவே, இந்திய குடியுரிமை (திருத்த) சட்டம் நமது மதச்சார்பற்ற அரசியல் அமைப்பின் மீதான சமீபத்திய தாக்குதல் ஆகும்.
கேரளாவின் செய்தி
கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போதெல்லாம் எங்கள் அதிகாரத்திற்குட்பட்ட அத்துணை அமைப்புகளையும் சமூக நல்லிணக்கத்தை பேணிக்காக்க பயன்படுத்தி வருகிறோம். வேறு எங்கும் இல்லாத வகையில் மக்களைத் திரட்டி சமூக நல்லிணக்கத்தை உத்தரவாதப்படுத்தி வருகிறோம்.
மதச்சார்பின்மை மற்றும் சமூக சமத்துவத்திற்கான கேரளாவின் போராட்டங்களில் இருந்து நாம் படிப்பதற்கு நிறைய அம்சங்கள் உள்ளன. சமூக பாகுபாடு, வகுப்புவாதம் மற்றும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போராடியதில் கேரளாவின் பல்வேறு மாறுபட்ட போக்குகளையுடைய சீர்திருத்த இயக்கங்களுக்கும் இடதுசாரி முற்போக்கு இயக்கங்களுக்கும் வரலாற்று ரீதியாக பெரும்பங்கு உண்டு. கேரளாவில் இந்துத்துவ சக்திகளைத் தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு வகையான மாறுபட்ட கொள்கைகளுடைய சமூக அமைப்புகளும் குடியுரிமைச் (திருத்த) சட்டத்திற்கு எதிராக ஒன்று திரண்டுள்ளன. டிசம்பர் 16 அன்று திருவனந்தபுரத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள் மற்றும் பண்பாட்டுப் போராளிகள் கலந்து கொண்ட அமைதியான சத்தியாக்கிரக போராட்டம் என்பது ‘மனித உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மை’ முதலிய நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை உயர்த்திப் பிடிப்பதில் எங்கள் ஒற்றுமையை பறைசாற்றுவதன் ஒரு அடையாளம் ஆகும்.
மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலுக்கு எதிரான எங்களது ஒன்றுபட்ட எதிர்ப்பையும் போராட்டத்தையும் இனிமேலும் தள்ளிப்போட முடியாது.
நன்றி: இந்து (ஆங்கிலம்) 18.12.19
தமிழில் : வழக்கறிஞர் பெ.ரவீந்திரன், சிவகாசி